Thursday, June 23, 2011
ஆதியாய் நின்றது மன்னவன் கோல்
ஆதியாய் நின்றது மன்னவன் கோல்
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல் – (திருக்குறள் – 543)
என்ற குறளில் வரும் ‘ஆதியாய் நின்றது மன்னவன் கோல்’
என்ற சொற்றொடர் மிக்க பொருள் பொதிந்தது. பரிமேலழகர்
தன் உரையில் ‘ஆதியாய் நின்றது மன்னவன் கோல்’ என்பதற்கு
வேதமும் அறனும் அநாதியாயினும் செங்கோல் இல்வழி நடவா
ஆகலின், அதனை அவற்றிற்கு “ஆதி” என்றும் அப்பெற்றியே
தனக்கு ஆதியாவது பிறிதில்லை என்பார் “நின்றது” என்றும்
கூறினார்” என்று மிக, மிக குழப்பமாகப் பொருள்
செய்திருக்கிறார். ஆனால், மணக்குடவர் உரையில்
‘ஆதியாய் நின்றது’ என்பதற்கு முதலாக நின்றது அரசன்
செய்யும் முறைமை’ என்று சிறந்த பொருள் செய்திருக்கிறார்.
அவற்றையும் ஈண்டு காண்போம்! இது நிற்க!!
“ஆதியாய் நின்றது மன்னவன் கோல்” என்பதில் நின்றது
என்பது இறந்தக் காலத்தைக் குறித்து நின்றது. அக்குறிப்பை,
மணக்குடவர் மிக சரியாய் ‘முதலாக நின்றது அரசன்
செய்யும் முறைமை’ என்று பொருள் செய்து
உணர்த்தியிருக்கிறார். ஆதியாய் நின்றது எனும் போது
முதலாக நின்றது அல்லது அமைந்தது என்று தான் பொருள்
கொள்ளவேண்டும். அதனால், மன்னவனே அந்தணர்களையும்,
அவர்களின் அறத்தையும் தோற்றுவித்தான் அல்லது
அவற்றுக்குக் காரணமாக அமைந்தான் என்றுதான் இந்த
குறளுக்குப் பொருள் கொள்ள வேண்டும். என்னை?
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.
என்ற குறளில் ’அந்தணர் நூற்கும், அறத்திற்கும்’ என்ற
சொற்றொடரை ஆராய்வோம். பெரும்பாலோர், இச்சொற்றொடர்
வைதிகப் பிராமணர்களின் வேதத்தையும் அவற்றில் கூறப்பட்ட
அறத்தையும் குறிக்கிறது என்றுப் பொருள் கொள்கின்றனர்.
பிராமணர்களின் வேதங்கள் ரிக், யஜூர், சாம மற்றும்
அதர்வண என்பன.
பொதுவாக, வேதங்கள் அபௌருஷேயம்1 என்று அழைப்பார்கள்.
அபெளருஷேயம் என்றால் யாராலும் இயற்றப்பட்டதல்ல என்று
பொருள். யாராலும் இயற்றப்படவில்லை என்றால் மன்னவன்
எவ்வாறு அதற்கு முதலாகயிருந்திருக்க முடியும்? குறள் “ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்” என்று அழத்தம் திருத்தமாக கூறுகிறது.
அப்படியாயின் இங்கு கூறப்பட்ட அந்தணர் நூல் என்பதும் அறம்
என்பதும் வேறுப் பொருளைக் குறிக்கிறது என்பது திண்ணம்!
அவற்றையும் பார்ப்போம்!!
பரதச் சக்கரவர்த்தி
சமணச் சரித்திரத்தின் படி, இந்த யுகத்தின் முதல் சக்கரவர்த்தி
பரதர் ஆவார். இவர் ஆதி தீர்த்தங்கரரான ஆதிபகவன்
என்றழைக்கப்படும் ரிஷபதேவரின் முதல் மகன். இவருடைய
பெயராலேயே இப்பூமி (இந்தியா) பரத கண்டம் என்றும் பரத
க்ஷேத்திரம் என்றழைக்கப்படுகிறது. இவற்றைப் பற்றியக்
குறிப்பு பாகவதப் புராணத்திலும்2 கூறப்பட்டிருக்கிறது.
முதல் சக்கரவர்த்தி
சமணச் சரித்திரத்தின்படி, இந்த பரதரே3 இந்த யுகத்தில் முதல்
சக்கரவர்த்தியாவார்.
அந்தணர் என்போர் அறவோர்
சமணச் சரித்திரத்தின்படி, ரிஷபதேவர் தன் காலத்தில் மக்களை
அவர்கள் செய்யும் தொழிலைக் கொண்டு, மூன்று வர்ணமாக
க்ஷத்திரியர், வைசியர் மற்றும் சூத்திரர் என்று வகைப்படுத்தியிருந்தார்.
ரிஷபதேவர்க் காலத்திற்கு பின், பரதர் ஆட்சிக்கு வந்தார். இவரே
பிராமணர்க்4 குலத்தைத் உருவாக்கி நான்கு வர்ணங்களாக ஆக்கினார்.
இவர் பிராமணர்களை எவ்வாறு, எந்த வகையினால் உருவாக்கினார்
என்பதையும் பார்ப்போம்.
அந்தணர்கள் தோற்றம்5
பரதர், தன் தந்தையான இரிஷபதேவரின் அறவுரைகளை மக்கள்
எவ்வாறு கடைப்பிடிக்கிறார்கள் என்று பார்க்க நினைத்தார். அதற்கு,
தான் தன்னுடைய நாட்டு மக்களை பார்ப்பதற்கு
ஆவலாகயிருப்பதாகவும் அதனால், மக்கள் அனைவரும் தன்
அரண்மனைக்கு வரவேண்டும் என்று உத்தரவுப் பிறப்பித்தார்.
தன் நான்கு அரண்மணை வாயில்களிலும் வழி நெடுக முளைத்த
தானியங்களை இறைத்து வைக்கவும் உத்தரவிட்டிருந்தார். மக்கள்
தன் அரசனைப் பார்க்கவும், அந்த பெரிய அரண்மணையைப்
பார்க்கவும் நான்கு வாயில்களிலும் வரத் தொடங்கினார்கள்.
அவர்களுக்கு சிறந்த ஆடை அணிகலன்களைக் கொடுக்கும்படி
ஆணைப் பிறப்பித்திருந்தார். இவ்வாறு வெகு நாள்கள், மக்கள்
வந்துச் சென்றுக் கொண்டிருந்தார்கள். இவற்றையெல்லாம்,
பார்த்துக் கொண்டிருந்த பரத சக்கரவர்த்தி, வாயிற் காவலர்களை
அழைத்து, மக்கள் யாவரும் வந்தார்களா என்று வினவினான்.
அதற்கு அக்காவலர்கள், சிலர் மட்டும் அரண்மணைக்கு
வெளியேயே நின்று விட்டு போய்விட்டார்கள் என்பதையறிந்து,
அவர்களை தன்னை வேறொரு மாளிகையில் சந்திக்கும்படி
சொல்லியனுப்பினான். அவ்வாறே, அவர்களும் அம்மாளிகைக்கு
வந்திருந்தார்கள். பரத சக்கரவர்த்தி, ஏன் தன்னை அரண்மணையில்
சந்திக்க வரவில்லை என்று அம்மக்களை வினவினார். அதற்கு,
அரசே நாங்கள் தங்களை சந்திக்க ஒவ்வொரு நாளும் வரும்
போதும் அரண்மணை வாயில்களில் முளைத்த தானியங்கள்
இறைந்து கிடப்பதைப் பார்த்தோம். முளைத்தத் தானியங்களுக்கு
உயிர் உண்டு என்பதால், அவற்றிற்கு ஊறு விளைவிக்கக்கூடாது
என்பதால் தங்களை சந்திக்காமலே திரும்பி விட்டோம் என்று
பதில் கூறியதைக் கேட்ட பரத சக்கரவர்த்தி பெரிதும் உவகைக்
கொண்டு, நீங்கள், ஆதிபகவன்/ஆதிநாதர் பகர்ந்த அறத்தை
பிறழாமல் கடைப்பிடித்து வருவதனால், இன்று முதல் பிராமணர்கள்
என்று அழைக்கப்படுவீர்கள் என்றும் ஆதிபகவனால் அருளப்பட்ட
அறத்தை எக்காலமும் கடைப்பிடித்து ஒழுகவேண்டும் என்று
கேட்டுக் கொண்டார்.
இவர்களையே, தேவர் பெருமான் (குறளாசிரியர்)
“அந்தணர் என்போர் அறவோர்மற் எவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டுஒழுக லான்” – குறள் (30)
என்று நமக்குக் காட்டியிருக்கிறார்.
முடிபு:
இக்குறளில் வரும் அந்தணர் நூற்கும் அறத்திற்கும் என்று
வருவது அறவோர்களைக் குறித்தும் மற்றும் அவர்களுடைய
செந்தண்மை பூண்டு ஒழுகும் அறத்தையும் குறிக்கிறது
என்பது அங்கை நெல்லிக்கனி. இதனால், பரத சக்கரவர்த்தியே
ஆதியாய் நின்ற மன்னன் என்பது வெள்ளிடை மலை.
என்னை?
இரா.பானுகுமார்,
சென்னை
அடிக்குறிப்புகள்:
1 - http://www.tamilhindu.com/2008/07/special-feature-vedam/
2 - http://www.krishnamurthys.com/profvk/VK2/SBAB7.html
[..The story of JaDa-Bharata
The history of Priyavrata, the first son of Manu Svayambhuva,
is taken up in the fifth skanda. Privrata’s son was Agnidhra
and his son was Nabhi. Nabhi was a great and devout ruler
and to him was born another avatar of Mahavishnu, by name
Rishabha. Rishabha, also called Rishabhadeva had 100 sons
of whom the eldest was Bharata whose story we are going to
see elaborately.
(Incidentally it is this Bharata after whom this country
was called BhArata-varsha; before that it was called aja-nAbha varsha)…]
3 - http://en.wikipedia.org/wiki/Chakravartin
The list of 12 Chakravartins as per Jainism is as follows:[10]
1. Bharata - Lord Rishabha's son.
2. Sagara - Anscestor of Bhagiratha as per Hindu puranas.
3. Maghavan
4. Sanatkumara
5. Shantinath - (also a Tirthankara)
6. Kunthunath - (also a Tirthankara)
7. Aranath - (also a Tirthankara)
8. Subhauma
9. Padmanabha
10. Harishena
11. Jayasena
12. Brahmadatt
In Jainism, a chakravartin was characterized by possession of
saptaratna, that is, the seven jewels, consisting of, charka,
queen, chariot, jewel, wealth, horse, and elephant.
Additionally, the list also included a prime minister and
a son (navaratna). A chakravartin is considered an ideal
human being endowed with thirty-two major signs of excellence
and many minor signs of excellence.
4 - http://en.wikipedia.org/wiki/Kshatriya (Jaina origin)
5 – ஸ்ரீ புராணம்
Labels:
அந்தணர்,
அறம்,
ஆதிபகவன்,
சமணம்,
திருக்குறள்
Wednesday, June 01, 2011
வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகும்
வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகும்
யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும்
- திருக்குறள் – துறவு – 346
இக்குறளில் வரும் “வானோர்க்குயர்ந்த உலகம் புகும்” என்ற
தொடர் மிகவும் முக்கியமானது. இத்தொடரில், அண்டவியல்
பற்றியக் குறிப்பு வருகிறது. ”வானோர்க்கும் மேலே உள்ள
உலகத்தில் புகும்” என்று சொல்லும் போது, வானோர்கள்
உலகம் யாது? அவர்களின் உலகத்திற்கும் மேலே உள்ள
உலகம் யாது? என்பனப் போன்ற கேள்விகள் எழுவது
இயற்கைத்தான். அவற்றுக்கு விடைக் காண வேண்டியது
முக்கியம்.
அவற்றைப் பார்க்கும் முன் இக்குறளுக்கு உரையாசிரியர்கள்
என்ன சொல்கிறார்கள் என்றுப் பார்த்துவிட்டு மேல் செல்லலாம்.
முதலில் பரிமேலழகர்
உரை: யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் – தான்
அல்லாத உடம்பை யான் என்றும் தன்னோடு இயைபு இல்லாத
பொருளை எனது என்றும் கருதி அவற்றின்கண் பற்றுச்
செய்தற்கு ஏதுவாகிய மயக்கத்தைக் கெடுப்பான்; வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும் – வானோர்க்கும் எய்தற்கு அரிய
வீட்டுலகத்தை எய்தும்.
மயக்கம்: அறியாமை. அதனைக் கெடுத்தலாவது தேசிகர் பால்
பெற்ற உறுதிமொழிகளானும் யோகப் பயிற்சியானும் அவை
’யான்’, ‘எனது’ அன்மைதெளிந்து, அவற்றின்கண் பற்றை
விடுதல் சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. இதனான்
இவ் இருவகைப் பற்றினையும் விட்டார்க்கே வீடு உளது
என்பது கூறப்பட்டது.
அப்படியே மணக்குடவரையும் படித்துவிடுவோம்,
உரை: யானென்றும் எனதென்றும் நினைக்கின்ற மயக்கத்தை
அறுக்குமவன், தேவர்க்கு மேலாகிய உலகத்தின் கண்ணே செல்லும்.
பரிமேலழகர் உரைவேறுபாடு
வழக்கம் போலவே இக்குறளிலும் தன் கைவண்ணத்தைக்
காட்டியிருக்கிறார் நம்ம பரி. அவர் உரை விரிவாகக் கூறப்பட்டிருப்பதுப்
போல் தோன்றினாலும், உண்மை பொருளை மறைத்துக் கூறியிருக்கிறார்.
எவ்வாறெனின்,
“வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும் – வானோர்க்கும் எய்தற்கு
அரிய வீட்டுலகத்தை எய்தும்” என்கிறார். மேலோட்டமாகப்
பார்த்தால் பொருள் சரியாகயிருப்பதுபோலத் தான் தோன்றும்
ஆனால், கூர்ந்து நோக்கினால் அதில் அவர் கையாண்ட பொருள்
மாற்றம் தெரியவரும்.
வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகும் – இதற்கு வானோர்கள்
(தேவர்கள்) வசிக்கும் ”உலகத்திற்கும்” உயர்ந்த உலகம் புகும்
என்று தான் பொருள். ”வானோர்க்கும் எய்தற்கு அரிய வீட்டுலகம்
எய்தும்” என்று அவர் உரை செய்திருப்பது இங்குப் பொருந்தாது.
அவ்வாறு உரைச் செய்யும் போது அவற்றின் நேரான பொருள்
மறைந்துப் போய் விடுகிறது. இவற்றை ஆராய்வோம்.
மணக்குடவர் உரை நேரிதன் பொருள் உரைக்கிறது. ” தேவர்க்கு
மேலாகிய உலகத்தின் கண்ணே செல்லும்” தேவர்க்கு மேலாகிய –
தேவர்கள் உறையும் உலகத்திற்கும் மேலாகிய உள்ள உலகத்தின்
கண்ணே செல்லும். என்பதுதான் சிறப்பான உரை.
சமண அண்டவியல்
சமணக் கோட்பாட்டின்படி, உயரின் தன்மைகளில், மேல் எழுப்பிச்
செல்லும் இயல்பும் ஒன்று. இதை
“வினையற விட்ட போழ்தின் வெடித்த ஏராண்டம் போல
நினைவரும் குணங்கள் எட்டும் நிறைந்து மேல் நோக்கி.. ”
என்று மேருமந்தர புராணம் கூறும்.
உயிரானது தன் வினைக் கட்டுக்களிலிருந்து நீங்கி, தன் சொரூபத்தை
உணரும் போது, மூவுலனின் உச்சியாகிய சிலாத்தலம் என்னும்
இடத்தில் போய் நீடு வாழும்/ நிலையாக தங்கும். இதை
“முனிவரும் உலகம் மூன்றும் இறைஞ்ச மூவுலகின் உச்சி
கனைகழல் அரசே நிற்றல் கைவலம் ஆகும் கண்டாய்”
என்று மேருமந்தர புராணம் கூறும்.
இச்சிலாத்தலம் வீடு, சித்தசேத்திரம், திருப்பேருலகம். மீளாகதி,
சித்தலோகம், அபாதம், லோகாக்ரம், சித்தசிலா, மோட்சத்தளம்,
உலகுச்சி, நிலமிசை, சிவகதி உறைநிலை போன்ற பெயர்களாலும்
அழைக்கப்படுகிறது.
மூன்று உலகம்
சமண அண்டவியல்படி, இந்த அண்டமானது மூன்று உலகங்களைக்
கொண்டது.
மேல் உலகம் - ஊர்த்வ லோகம் (பல அடுக்குகள் கொண்ட இந்த
இடத்தில் பலதரப்பட்ட வானவர்கள்/தேவர்கல் வசிக்கிறார்கள்)
மத்திய உலகம் – மத்ய லோகம் (மனிதர்கள், மிருகங்கள்,
பறவைகள், ஊர்வன மற்றும் கிருமிகள் வசிக்கும் இடம்)
கீழ் உலகம் – அதோ லோகம் (ஏழு அடுக்குகள் கொண்டது.
நரகவாசிகள் – நரகப் பிறப்பெடுத்த உயிர்கள் வசிக்கும் இடம்)
இவற்றின் குறியீடுதான் தீர்த்தங்கரர்களின் படிமத்தின் தலைமேற்க்
காட்டும் முக்குடைகள். மூன்று உலகத்தையும் கடந்து வென்றவர்
என்ற நோக்கில் முக்குடைக் காட்டப்படுகிறது.
“திங்கள்மூன்று அடுக்கிய திருமுக் குடைக்கீழ்ச்
செங்கதிர் ஞாயிற்றுத் திகழொளி சிறந்து
கோதைதாழ் பிண்டிக் கொழுநிழல் இருந்த
ஆதியில் தோற்றத்து அறிவனை வணங்கிக்
கந்தன் பள்ளிக் கடவுளர்க்கு எல்லாம்”
என்று சிலப்பதிகாரத்தில் வருவதைக் காண்க.
மேல் உலகம் – ஊர்த்வ லோகம்
மொத்தம் பதினாறு அடுக்குகளைக் கொண்டது இந்த மேலுலகம்.
இவற்றில் பலவகைப் பட்ட தேவர்கள் வாழ்கிறார்கள். தேவர்களிலும்
பலப் பிரிவுகள் சொல்லப்படுகிறது. அதையும் தாண்டி உச்சியை
சிலாத்தலம் என்றும் சித்தசிலை என்று அழைக்கப்படுகிறது.
வீடுபேறடைந்த உயிர்கள் சென்றடைவது இங்கேதான். சமண
கோட்பாட்டின்படி, வீடுபேறடைந்த உயிர்கள் மறுபடியும்
பிறப்பெடுப்பதில்லை.
இவற்றைக் கீழே வரும் பாடல் விளக்கக் காணலாம்.
“நடுவண் எண்புகைக் கொழுப்பாய் நந்தி ஈச்சிறகொத்து ஈற்றிற்
குடை மலர்ந்திருந்ததே போன்று இரண்டரை தீவோடு ஒத்துக்
கடையிலா அறிவு காட்சி உடையவர் கழுமி நின்ற
இடமது உலகத்து உச்சி ஏத்தருந் திறத்ததாமே”
என்று மேருமந்தர புராணம் பகரும்.
உலகுச்சி அல்லது சித்தசிலா அல்லது நிலமிசை
உயிரைவிட்டு அனைத்துக் கருமங்களும் நீங்குதல் அல்லது
விடுதல் வீடுபேறு எனப்படும். இது மொக்கம், மோக்ஷம்,
முக்தி, கைவல்யம், சித்தத்துவம், சிவகதி, சிவசுகம்,
நிர்வாணம், பரிநிர்வாணம், சேமம், சித்தகதி, பஞ்சகதி,
திரிதராகதி, அட்டமபுடலி, மீட்சியில் வீட்டுலகம், மீட்சியில்
பேரின்பம், இறுதியிலா பேரின்பம், பேர்த்துப் பிறவா பெருமை,
மீண்டுவாரா நெறி என பலவாறாகக் கூறப்படுகிறது.
“கேவல மடந்தை என்னுங் கேழ்கிளர் நெடிய வாட்கட்
பூவலர் முல்லைக் கண்ணிப் பொனொரு பாக மாகக்
காவலன் தானோர் கூறாக கண்இமை யாது புல்லி
மூவுல குச்சி இன்பக் கடலுனுள் மூழ்கி னானே”
- சீவக சிந்தாமணி (3117)
என்றும்,
”அலகில் பெருங்குணத்தோ னாவரண நீக்கி
உலக மலோக முடனே விழுங்கிப்
புலவன் முடிவென்னும் பூங்கொடியுந் தானும்
நிலவு சிவகதியு ணீங்காது நின்றான்”
- சூளாமணி (2125)
என்றும்,
”மலர்மிசை ஏகினான் மானடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்”
- திருக்குறள் (3)
முடிபு
வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகும் என்பது வானோர்கள்
இருக்கின்ற அல்லது வசிக்கின்ற இடத்திற்கும் உயர்ந்த
உலகமான சிலாத்தலத்தில் தங்கும் என்பதுதான் நேரடையான
பொருள். பரிமேலழகர் தன் உரையில் சிறிது மாற்றிப்
பொருள் தந்திருக்கிறார் என்பது வெள்ளிடை மலை.
இரா.பானுகுமார்,
சென்னை
பி.கு: மேல் தகவலுக்கு கீழேச் சுட்டியைப் பார்க்கவும்!
http://en.wikipedia.org/wiki/Jain_cosmology
http://en.wikipedia.org/wiki/Moksa_(Jainism)
யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும்
- திருக்குறள் – துறவு – 346
இக்குறளில் வரும் “வானோர்க்குயர்ந்த உலகம் புகும்” என்ற
தொடர் மிகவும் முக்கியமானது. இத்தொடரில், அண்டவியல்
பற்றியக் குறிப்பு வருகிறது. ”வானோர்க்கும் மேலே உள்ள
உலகத்தில் புகும்” என்று சொல்லும் போது, வானோர்கள்
உலகம் யாது? அவர்களின் உலகத்திற்கும் மேலே உள்ள
உலகம் யாது? என்பனப் போன்ற கேள்விகள் எழுவது
இயற்கைத்தான். அவற்றுக்கு விடைக் காண வேண்டியது
முக்கியம்.
அவற்றைப் பார்க்கும் முன் இக்குறளுக்கு உரையாசிரியர்கள்
என்ன சொல்கிறார்கள் என்றுப் பார்த்துவிட்டு மேல் செல்லலாம்.
முதலில் பரிமேலழகர்
உரை: யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் – தான்
அல்லாத உடம்பை யான் என்றும் தன்னோடு இயைபு இல்லாத
பொருளை எனது என்றும் கருதி அவற்றின்கண் பற்றுச்
செய்தற்கு ஏதுவாகிய மயக்கத்தைக் கெடுப்பான்; வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும் – வானோர்க்கும் எய்தற்கு அரிய
வீட்டுலகத்தை எய்தும்.
மயக்கம்: அறியாமை. அதனைக் கெடுத்தலாவது தேசிகர் பால்
பெற்ற உறுதிமொழிகளானும் யோகப் பயிற்சியானும் அவை
’யான்’, ‘எனது’ அன்மைதெளிந்து, அவற்றின்கண் பற்றை
விடுதல் சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. இதனான்
இவ் இருவகைப் பற்றினையும் விட்டார்க்கே வீடு உளது
என்பது கூறப்பட்டது.
அப்படியே மணக்குடவரையும் படித்துவிடுவோம்,
உரை: யானென்றும் எனதென்றும் நினைக்கின்ற மயக்கத்தை
அறுக்குமவன், தேவர்க்கு மேலாகிய உலகத்தின் கண்ணே செல்லும்.
பரிமேலழகர் உரைவேறுபாடு
வழக்கம் போலவே இக்குறளிலும் தன் கைவண்ணத்தைக்
காட்டியிருக்கிறார் நம்ம பரி. அவர் உரை விரிவாகக் கூறப்பட்டிருப்பதுப்
போல் தோன்றினாலும், உண்மை பொருளை மறைத்துக் கூறியிருக்கிறார்.
எவ்வாறெனின்,
“வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும் – வானோர்க்கும் எய்தற்கு
அரிய வீட்டுலகத்தை எய்தும்” என்கிறார். மேலோட்டமாகப்
பார்த்தால் பொருள் சரியாகயிருப்பதுபோலத் தான் தோன்றும்
ஆனால், கூர்ந்து நோக்கினால் அதில் அவர் கையாண்ட பொருள்
மாற்றம் தெரியவரும்.
வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகும் – இதற்கு வானோர்கள்
(தேவர்கள்) வசிக்கும் ”உலகத்திற்கும்” உயர்ந்த உலகம் புகும்
என்று தான் பொருள். ”வானோர்க்கும் எய்தற்கு அரிய வீட்டுலகம்
எய்தும்” என்று அவர் உரை செய்திருப்பது இங்குப் பொருந்தாது.
அவ்வாறு உரைச் செய்யும் போது அவற்றின் நேரான பொருள்
மறைந்துப் போய் விடுகிறது. இவற்றை ஆராய்வோம்.
மணக்குடவர் உரை நேரிதன் பொருள் உரைக்கிறது. ” தேவர்க்கு
மேலாகிய உலகத்தின் கண்ணே செல்லும்” தேவர்க்கு மேலாகிய –
தேவர்கள் உறையும் உலகத்திற்கும் மேலாகிய உள்ள உலகத்தின்
கண்ணே செல்லும். என்பதுதான் சிறப்பான உரை.
சமண அண்டவியல்
சமணக் கோட்பாட்டின்படி, உயரின் தன்மைகளில், மேல் எழுப்பிச்
செல்லும் இயல்பும் ஒன்று. இதை
“வினையற விட்ட போழ்தின் வெடித்த ஏராண்டம் போல
நினைவரும் குணங்கள் எட்டும் நிறைந்து மேல் நோக்கி.. ”
என்று மேருமந்தர புராணம் கூறும்.
உயிரானது தன் வினைக் கட்டுக்களிலிருந்து நீங்கி, தன் சொரூபத்தை
உணரும் போது, மூவுலனின் உச்சியாகிய சிலாத்தலம் என்னும்
இடத்தில் போய் நீடு வாழும்/ நிலையாக தங்கும். இதை
“முனிவரும் உலகம் மூன்றும் இறைஞ்ச மூவுலகின் உச்சி
கனைகழல் அரசே நிற்றல் கைவலம் ஆகும் கண்டாய்”
என்று மேருமந்தர புராணம் கூறும்.
இச்சிலாத்தலம் வீடு, சித்தசேத்திரம், திருப்பேருலகம். மீளாகதி,
சித்தலோகம், அபாதம், லோகாக்ரம், சித்தசிலா, மோட்சத்தளம்,
உலகுச்சி, நிலமிசை, சிவகதி உறைநிலை போன்ற பெயர்களாலும்
அழைக்கப்படுகிறது.
மூன்று உலகம்
சமண அண்டவியல்படி, இந்த அண்டமானது மூன்று உலகங்களைக்
கொண்டது.
மேல் உலகம் - ஊர்த்வ லோகம் (பல அடுக்குகள் கொண்ட இந்த
இடத்தில் பலதரப்பட்ட வானவர்கள்/தேவர்கல் வசிக்கிறார்கள்)
மத்திய உலகம் – மத்ய லோகம் (மனிதர்கள், மிருகங்கள்,
பறவைகள், ஊர்வன மற்றும் கிருமிகள் வசிக்கும் இடம்)
கீழ் உலகம் – அதோ லோகம் (ஏழு அடுக்குகள் கொண்டது.
நரகவாசிகள் – நரகப் பிறப்பெடுத்த உயிர்கள் வசிக்கும் இடம்)
இவற்றின் குறியீடுதான் தீர்த்தங்கரர்களின் படிமத்தின் தலைமேற்க்
காட்டும் முக்குடைகள். மூன்று உலகத்தையும் கடந்து வென்றவர்
என்ற நோக்கில் முக்குடைக் காட்டப்படுகிறது.
“திங்கள்மூன்று அடுக்கிய திருமுக் குடைக்கீழ்ச்
செங்கதிர் ஞாயிற்றுத் திகழொளி சிறந்து
கோதைதாழ் பிண்டிக் கொழுநிழல் இருந்த
ஆதியில் தோற்றத்து அறிவனை வணங்கிக்
கந்தன் பள்ளிக் கடவுளர்க்கு எல்லாம்”
என்று சிலப்பதிகாரத்தில் வருவதைக் காண்க.
மேல் உலகம் – ஊர்த்வ லோகம்
மொத்தம் பதினாறு அடுக்குகளைக் கொண்டது இந்த மேலுலகம்.
இவற்றில் பலவகைப் பட்ட தேவர்கள் வாழ்கிறார்கள். தேவர்களிலும்
பலப் பிரிவுகள் சொல்லப்படுகிறது. அதையும் தாண்டி உச்சியை
சிலாத்தலம் என்றும் சித்தசிலை என்று அழைக்கப்படுகிறது.
வீடுபேறடைந்த உயிர்கள் சென்றடைவது இங்கேதான். சமண
கோட்பாட்டின்படி, வீடுபேறடைந்த உயிர்கள் மறுபடியும்
பிறப்பெடுப்பதில்லை.
இவற்றைக் கீழே வரும் பாடல் விளக்கக் காணலாம்.
“நடுவண் எண்புகைக் கொழுப்பாய் நந்தி ஈச்சிறகொத்து ஈற்றிற்
குடை மலர்ந்திருந்ததே போன்று இரண்டரை தீவோடு ஒத்துக்
கடையிலா அறிவு காட்சி உடையவர் கழுமி நின்ற
இடமது உலகத்து உச்சி ஏத்தருந் திறத்ததாமே”
என்று மேருமந்தர புராணம் பகரும்.
உலகுச்சி அல்லது சித்தசிலா அல்லது நிலமிசை
உயிரைவிட்டு அனைத்துக் கருமங்களும் நீங்குதல் அல்லது
விடுதல் வீடுபேறு எனப்படும். இது மொக்கம், மோக்ஷம்,
முக்தி, கைவல்யம், சித்தத்துவம், சிவகதி, சிவசுகம்,
நிர்வாணம், பரிநிர்வாணம், சேமம், சித்தகதி, பஞ்சகதி,
திரிதராகதி, அட்டமபுடலி, மீட்சியில் வீட்டுலகம், மீட்சியில்
பேரின்பம், இறுதியிலா பேரின்பம், பேர்த்துப் பிறவா பெருமை,
மீண்டுவாரா நெறி என பலவாறாகக் கூறப்படுகிறது.
“கேவல மடந்தை என்னுங் கேழ்கிளர் நெடிய வாட்கட்
பூவலர் முல்லைக் கண்ணிப் பொனொரு பாக மாகக்
காவலன் தானோர் கூறாக கண்இமை யாது புல்லி
மூவுல குச்சி இன்பக் கடலுனுள் மூழ்கி னானே”
- சீவக சிந்தாமணி (3117)
என்றும்,
”அலகில் பெருங்குணத்தோ னாவரண நீக்கி
உலக மலோக முடனே விழுங்கிப்
புலவன் முடிவென்னும் பூங்கொடியுந் தானும்
நிலவு சிவகதியு ணீங்காது நின்றான்”
- சூளாமணி (2125)
என்றும்,
”மலர்மிசை ஏகினான் மானடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்”
- திருக்குறள் (3)
முடிபு
வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகும் என்பது வானோர்கள்
இருக்கின்ற அல்லது வசிக்கின்ற இடத்திற்கும் உயர்ந்த
உலகமான சிலாத்தலத்தில் தங்கும் என்பதுதான் நேரடையான
பொருள். பரிமேலழகர் தன் உரையில் சிறிது மாற்றிப்
பொருள் தந்திருக்கிறார் என்பது வெள்ளிடை மலை.
இரா.பானுகுமார்,
சென்னை
பி.கு: மேல் தகவலுக்கு கீழேச் சுட்டியைப் பார்க்கவும்!
http://en.wikipedia.org/wiki/Jain_cosmology
http://en.wikipedia.org/wiki/Moksa_(Jainism)
Subscribe to:
Posts (Atom)